விளையாட்டு விடுதிகள்-மையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு மாவட்ட அளவிலான தேர்வு


விளையாட்டு விடுதிகள்-மையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு மாவட்ட அளவிலான தேர்வு
x

விளையாட்டு விடுதிகள்-மையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு மாவட்ட அளவிலான தேர்வு 24-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

விளையாட்டு விடுதிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் அரியலூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் பெரம்பலூர், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாவட்ட அளவிலான தேர்வு

மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்), திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் வேலூர் சாத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு இந்த கல்வியாண்டிற்கான 7, 8, 9, 11-ம் வகுப்புகள் சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு சேர்க்கையும் நடைபெறவுள்ளது.

அதற்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி காலை 7 மணி முதல் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெறவுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

மாணவ-மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ், வில்வித்தை பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு கூடுதலாக கிரிக்கெட் விளையாட்டுக்கும் சேர்க்கை நடைபெறும். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சோ்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் வருகிற 23-ந்தேதி மாலை 5 மணியாகும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு 24-ந்தேதி நடத்தப்படும் மாவட்ட அளவிலான தோ்வு போட்டிகள் விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story