தீபாவளி பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது..!


தீபாவளி பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது..!
x

தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது..!

சென்னை,

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அந்த வகையில் தீபாவளி முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. நவம்பர் 9, 10-ந்தேதி செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

இந்த நிலையில், நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் ரெயில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. தென்மாவட்ட ரெயில்களில் இன்றும் டிக்கெட் விற்றுத்தீர்ந்தது. புக்கிங் தொடங்கிய சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் , உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. கவுன்ட்டரில் டிக்கெட் பெற வரிசையில் நின்றவர்கள் டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் இருந்து கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story