தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் வெளிநடப்பு


தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் வெளிநடப்பு
x

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 ேபர் வெளிநடப்பு செய்தனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் யாகப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுயேட்சை கவுன்சிலர் கணேசன் பேசுகையில், கடந்த மாதம் 11 பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்ததாக கூறி இடித்து அகற்றினர். தற்போது கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதி கேட்டால், எந்த விதத்தில் முறையான செயல். இதற்கு உறுதுணையாக இருக்கும் தலைவர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார்.

இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர் மாயன் பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொது நிதியில் அரசு தரப்பில் அனுமதிக்கப்பட்ட நிதியை கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகள் செய்யப்படாததை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் கவுன்சிலர்கள் 12 பேரும் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொது நிதி மற்றும் பல்வேறு நிதிகளை பயன்படுத்த கவுன்சிலர்கள் சிலர் ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் தான் பல்வேறு பணிகள் தேக்க நிலையில் உள்ளது என துணைத்தலைவர் கூறினார். இதனை ஏற்காமல் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story