தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு


தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு
x

தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்

மதுரை

தி.மு.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டம் மேலூரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.பி. ராஜசிம்மன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:- கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில்தான் மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, தமிழகத்துக்கு சீராக காவிரி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இரு மாநிலங்களுக்கு இடையே இருந்த பல ஆண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும். 2021-ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசின் அனுமதி இல்லாமல், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முடியாது என்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் அறிவித்தார்.

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. மேலும், தேர்தல் வாக்குறுதியில் மேகதாது அணை கட்ட ரூபாய் 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க.வோ, இதனை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகாவுக்கு சென்று காங்கிரஸ் கட்சியுடன் நட்பு பாராட்டி கொண்டிருக்கிறார் என்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஏ.ஆர். மகாலெட்சுமி பங்கேற்று பேசினார். இதில் கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் மாதவ கண்ணன், ஆலயபிரிவு வீரபாண்டி செல்வம், மீனவ அணி பிரிவு உதயகுமார், கிழக்கு மாவட்ட ஊடக பிரிவின் தலைவர் செல்வமாணிக்கம், துணை தலைவர் டி.கே..சரவணன், செயலாளர் மேலூர் அழகர், செந்தில், பாஸ்கர், அழகர்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது இதில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலா நிர்வாகிகள் சரவணன், விஜயேந்திரன், சின்னசாமி, காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story