மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தையும், அதே நாளில் பழங்குடியின பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் கண்டித்தும், தாய்மையை நிர்வாணப்படுத்தி இந்தியாவை தலை குனிய வைத்த சம்பவங்களை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி அரசை கண்டித்தும் நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட மகளிரணி சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மணிப்பூரில் பாலியல் துன்புறுத்தலை கண்டித்தும், 80 நாட்களாக நடந்து வரும் கலவரங்களை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் கலையரசி உள்பட பலர் பேசினார்கள். டாக்டர் ஜெயலட்சுமிகருணாகரன், பெரம்பலூர் ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story