அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது - ஆர்.எஸ்.பாரதி பேட்டி


அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
x

அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. யாருடைய அழிவிலும் திமுக இன்பம் காணாது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம். அதிமுக செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள்.

ஓ.பன்னீர்செல்வம் பின்புலத்தில் திமுக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை. எதற்கெடுத்தாலும் முதல்-அமைச்சரையும், திமுகவையும் தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது. யார் மீதோ உள்ள கோபத்தை திமுகவின் பக்கம் எடப்பாடி பழனிசாமி காட்டுகிறார். வருமானவரி சோதனையை கண்டிக்க தெம்பில்லாமல் திமுகவை குறை கூறுகிறார்.

சட்டம், ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?. ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story