தமிழகத்தை இனி திமுக தான் ஆட்சி செய்யும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தை இனி திமுக தான் ஆட்சி செய்யும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விருதுநகர்,
திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களை 54 தொகுப்புகளாக வெளியிட்டு உள்ளோம். தமிழகத்தை அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா; தமிழ்நாடு என்ற பெயரை கூறிய போது சட்டப்பேரவை உற்சாகத்தில் மிதந்தது.
ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது. பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை இனி திமுக தான் தொடர்ந்து ஆட்சி செய்யும் என்பதை தொண்டர்கள் மனதில் வைத்து சொல்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போது இருந்தே ஆற்ற வேண்டும், நாற்பதும் நமதே, நாடும் நமதே. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கிடைப்பதற்கு இந்த விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும்.
வலுவான மாநிலங்களே கூட்டாட்சியின் அடிப்படை, தமிழ்நாடு மட்டும் தன்னிறைவு பெற்றால் போதாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தன்னிறைவு ஆக வேண்டும். அது தான் திமுகவின் கொள்கை. இந்தியா முழுமைக்கும் சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.