வாக்காளர்களின் விவரங்கள் வீடு, வீடாக சரிபார்ப்பு பணி தொடங்கியது


வாக்காளர்களின் விவரங்கள் வீடு, வீடாக சரிபார்ப்பு பணி தொடங்கியது
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களின் விவரங்கள் வீடு, வீடாக சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.

புதுக்கோட்டை

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 ஜனவரி 1-ந் தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதனை தொடர்ந்து ஜனவரி 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

சரிபார்ப்பு பணி

முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். இந்த பணி நேற்று தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக, விரைவாக மற்றும் 100 சதவீதம் தூய்மையாகவும் முடிக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்டத்தில் இந்த சரிபார்ப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story