கார் மோதி தொழிலாளி பலியான வழக்கில் டிரைவர் கைது


கார் மோதி தொழிலாளி பலியான வழக்கில் டிரைவர் கைது
x

பொதட்டூர்பேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலியான வழக்கில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

விபத்தில் பலி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே மேல்நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு (வயது 40). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 4-ந் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அன்பு படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

கார் டிரைவர் கைது

இந்த விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் அவரது பிணத்தை ரோட்டில் வைத்து சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டிப்பாக கைது செய்வோம் என்று திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பொதட்டூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்த நிலையில், விபத்துக்கு காரணமான பொதட்டூர்பேட்டை கிருஷ்ணானந்தா தெருவை சேர்ந்த தீனதயாளன் (25) என்பவரை கைது செய்த போலீசார் அவர் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story