பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள அரசு பஸ் டிரைவர்களுக்கான ஓட்டுனர் கையேடு - அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்


பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள அரசு பஸ் டிரைவர்களுக்கான ஓட்டுனர் கையேடு - அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்
x

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ள அரசு பஸ் டிரைவர்களுக்கான ஓட்டுனர் கையேட்டை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

சென்னை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களை (சராசரியாக 80 லட்சம் கி.மீ.) இயக்குவதின் மூலம் சுமார் 1.40 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர். இதில் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் இடம் பெறுகிறார்கள். அவர்களது பணியில் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், விபத்தின்றியும் செயல்பட அவ்வப்போது சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் போக்குவரத்து கழகங்கள் மூலம் புத்தாக்க பயிற்சியானது தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது டிரைவர்கள் ஏற்கனவே அறிந்த விஷயங்களை நினைவூட்டும் விதமாக, வாகனங்கள் ஓட்டும் விதம், பஸ்கள், சாலைகள் மற்றும் டிரைவர்களின் பொதுவான தவறுகள், அபாயகரமான நடத்தை மற்றும் அவற்றை நிர்வகித்தல், பாதுகாப்பான இயக்கம், எரிபொருள் சிக்கனம், உடல் நலம் மற்றும் மனநலம், தொழில் முறை இன்னல்கள் மற்றும் வாகன பராமரிப்பு பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து 'ஓட்டுனர் கையேடு' வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் டிரைவர்களும் பயன்பெறும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஓட்டுனர் கையேட்டை வெளியிடும் விதமாக, மாநகர போக்குவரத்து மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களின் 10 டிரைவர்களுக்கு ஓட்டுனர் கையேட்டை வழங்கினார்.

அனைத்து போக்குவரத்துக் கழகங்கள் தங்கள் பணிமனைகளின் கீழ் உள்ள பகுதிக்கு ஏற்ப முக்கிய குறிப்புகள் மற்றும் தொலைபேசி எண்களை உள்ளடக்கி தனித்தனியாக அச்சிட்டு அனைத்து டிரைவர்களுக்கும் வழங்க இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் கே.கோபால் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story