வறட்சி நிவாரணத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் -விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்


வறட்சி நிவாரணத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் -விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

வறட்சி நிவாரணத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் திருவெற்றியூர் கவாஸ்கர், கோடனூர் ராஜா, ஆதியூர் தம்பிராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாத 57 வருவாய் கிராமங்களுக்கும் உடனடியாக காப்பீடு வழங்க மற்றும் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கு அரசு நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் காப்பீடு நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது. எனவே விவசாயிகளை பாதிக்கும் விதிமுறைகளை திருத்தி விவசாயிகள் முழுமையாக பயனடைய செய்ய வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு நெற்பயிர் அறுவடை சராசரி கணக்கின்படி கொடுக்காமல் கடந்த 5 வருட சராசரி அறுவடையுடன் ஒப்பிட்டு வழங்குவது முறையற்ற செயலாகும். பயிர் அறுவடை சோதனை நடத்தும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் முன்னிலையில் நடத்த வேண்டும்.

வறட்சி நிவாரணம் மற்றும் கடன் தள்ளுபடிகளில் சிறுகுறு, பெரிய விவசாயிகள் என்ற பாரபட்சமின்றி அனைத்து விவசாய நிலங்களுக்கும் வழங்க வேண்டும்.

தீர்மானம்

சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் இருந்து எழுவங்கோட்டை வழியாக திருவாடானை வட்டார கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாயை சீர் செய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ள இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12-ந்தேதி காலை 9 மணியளவில் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து விவசாயிகள் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வர் கோவிலில் இருந்து ஊர்வலமாக போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷிடம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர். இக் கூட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் வட்டாரங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story