போதைப்பொருள் கடத்தல் வழக்கு: சென்னை அழைத்துவரப்பட்டார் ஜாபர் சாதிக்


போதைப்பொருள் கடத்தல் வழக்கு: சென்னை அழைத்துவரப்பட்டார் ஜாபர் சாதிக்
x
தினத்தந்தி 18 March 2024 4:10 AM GMT (Updated: 18 March 2024 4:35 AM GMT)

சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

டெல்லியில் கடந்த மாதம், ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கிய விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார். போதைப்பொருள் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டவுடன் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜாபர் சாதிக் இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 500 கிலோ 'சூடோபெட்ரின்' என்ற போதைப்பொருள் தயாரிப்பு வேதிப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்டார். டெல்லியில் அவரிடம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் விசாரணை முடிந்து விமானம் மூலம் ஜாபர் சாதிக் சென்னை அழைத்துவரப்பட்டார். சென்னை அடுத்த அயப்பாக்கம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கிடம் தொடந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர போலீசார் முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இருவரும் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க அவர்களுக்குஎதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story