மதகு சீரமைப்பு பணிகள் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை முழுவதும் வெளியேற்ற முடிவு - 702 மில்லியன் கன அடியாக குறைந்தது


மதகு சீரமைப்பு பணிகள் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை முழுவதும் வெளியேற்ற முடிவு - 702 மில்லியன் கன அடியாக குறைந்தது
x

மதகு சீரமைப்பு மற்றும் மதகு கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, ஜூலை 20-ந் தேதி தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரி அருகே உள்ள நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் மதகு மற்றும் கிணறுகள் சேதமடைந்துள்ளன. இந்த மதகு கிணறுகளை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும் மதகுகள் சீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளன. இதனை கருத்தில் கொண்டு ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 23.95 அடியாக பதிவாகியது. ஏரியில் வெறும் 702 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 235 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.


Next Story