ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரியம் மாறாமல் தயாரிக்கப்படும் பாப்பட்டான் குழல்- விழாவாக கொண்டாடும் பொதுமக்கள்


ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரியம் மாறாமல் பாப்பட்டான் குழல் தயாரிக்கப்படுவதோடு, விழாவாக பொதுமக்கள் கொண்டாடுகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரியம் மாறாமல் பாப்பட்டான் குழல் தயாரிக்கப்படுவதோடு, விழாவாக பொதுமக்கள் கொண்டாடுகின்றனர்.

பாப்பட்டான் குழல்

ஆறுகள், குளம், நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயிகள் நம்பிக்கையோடு ஆடி பட்டம் தேடி பார்த்து விதைக்கனும் என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப விவசாயிகள் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். மேலும் ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்று கூடி ஆற்று பெருக்கை பார்த்து ரசிப்பார்கள். இதற்கிடையில் வாழை மட்டையில் விளக்குகளை ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டும் வழிபாடு நடத்தப்படும்.

பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் பகுதிகளில் இன்னும் பாராம்பரியம் மாறாமல் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்கி கொண்டாடுவது போன்று ஆடிபெருக்கிற்கு பாப்பட்டான் குழல் விளையாட்டு என்பது இன்னும் பழமை மாறாமல் உள்ளது. பாப்பட்டான் குழலில் காய்களை வைத்து அடித்து விளையாடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் விளையாட்டாக உள்ளது. ஆனைமலை பகுதியில் குழந்தைகள் ஆர்வமுடன் பாப்பட்டான் குழலை வாங்கி சென்றனர். இதுகுறித்து குழல் தயாரிக்கும் தொழிலாளிகள் கூறியதாவது:-

பாதுகாக்க

ஆடிப்பெருக்கிற்கு 2 மாதத்திற்கு முன் தான் இந்த பாப்பட்டான் குழல் தயாரிக்கும் வேலையை தொடங்குவோம். மிகவும் கஷ்டமான வேலை தான். இதை இயற்கையாக உருவாகும் மூங்கில், பனை ஓலையை வாங்கி பாப்பட்டான் குழல் தயாரிக்கப்படுகிறது. தற்போது காலப்போக்கிற்கு ஏற்ப குழந்தைகளை கவருவதற்கு பல வண்ணங்களில் குழல் தயாரிக்கப்படுகிறது. ஆடி பெருக்கு என்றால் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் பகுதிகளில் பாப்பட்டான் குழல் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த குழல் வேறு எந்த பகுதியிலும் கிடைக்காது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.7-க்கு விற்பனை ஆனது. அப்போது சுமார் 30 பேர் வரை இந்த தொழிலை செய்து வந்தனர். தற்போது இந்த தொழிலை ஒரு சிலர் மட்டும் செய்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பாப்பட்டான் குழல் பற்றி தெரிவதில்லை. எனவே பெற்றோர் பராம்பரியத்தை பாதுகாக்க குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். பராம்பரியம் அழியாமல் இருக்க இந்த தொழிலை செய்து வருகின்றோம். இதற்கு முன் ஆடிப்பெருக்கு என்றால் 700 பாப்பட்டான் குழல் வரை தயாரிப்போம். தற்போது குறைந்த அளவே தயாரிக்கப்படுகிறது. ஒரு குழல் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story