தொடர் வழிப்பறி எதிரொலி: 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை


தொடர் வழிப்பறி எதிரொலி: 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x

தொடர் வழிப்பறி எதிரொலியாக 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

செங்கல்பட்டு

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களை வழிமறித்து கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு வந்து வழிபறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க துணை கமிஷனர், உதவி கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 2 உதவி கமிஷனர் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு முழுவதும் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதே போல வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் சந்தேகத்துக்குரிய 12 பேரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் விடுதி, வாகன சோதனைகளில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story