அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் உள்பட 18 பேர் நீக்கம் எடப்பாடி பழனிசாமி அதிரடி


அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் உள்பட 18 பேர் நீக்கம் எடப்பாடி பழனிசாமி அதிரடி
x

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் உள்பட 18 பேர் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை வானகரத்தில் கடந்த 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், 5 மாவட்ட செயலாளர்கள் உள்பட 18 பேர் நேற்று கூண்டோடு கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் மகன்கள்

அ.தி.மு.க. கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக்கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வர்த்தக அணி செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், தேர்தல் பிரிவு இணை செயலாளர் முன்னாள் எம்.பி. இரா.கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் (திருச்சி), சையதுகான் (தேனி), ஆர்.டி.ராமச்சந்திரன் (பெரம்பலூர்), எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் (தஞ்சை வடக்கு), எஸ்.ஏ.அசோகன் (கன்னியாகுமரி கிழக்கு) மற்றும் புதுச்சேரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓம்சக்தி சேகர், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி. (தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்), வி.ப.ஜெயபிரதீப், செய்தி தொடர்பாளர்கள் கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், தேர்தல் பிரிவு துணை செயலாளர் அம்மன் பி.வைரமுத்து, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் டி.ரமேஷ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல செயலாளர் வினுபாலன், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, தென்சென்னை தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சைதை எம்.எம்.பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள்.

தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது

அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story