ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் பலம் இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே - எடப்பாடி பழனிசாமி சவால்


ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் பலம் இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே - எடப்பாடி பழனிசாமி சவால்
x
தினத்தந்தி 18 Aug 2022 7:06 AM GMT (Updated: 18 Aug 2022 8:32 AM GMT)

இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி கோரிக்கை வைத்தார்.

*வழக்கு வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அதிமுகவை சிலர் தன்வசம் கொண்டுவர முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம். அதனை தடுக்கும் போது தான் சில பிரச்னைகள் உருவாகின்றன; பொதுக்குழு உறுப்பினர்களால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகின.அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம்: செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்குப் பின் இரண்டு அணியில் இருந்தவர்கள் 2017 ல் ஒன்றாக இணைந்தோம்.பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது..

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக அடிப்படை உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும், பொதுக்குழு உறுப்பினர்கள் என்பவர்கள் நியமன உறுப்பினர்கள் அல்ல. கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற அவர், "ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவை கூட்டக்கூடாது என காவல்துறைக்கு கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ். நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கியது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்

ஓ.பன்னீர்செல்வம் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றரோ அவர்களை அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான் அவர்களைதான் அழைக்கிறார்.

அவரிடம் நாங்கள் 15 நாட்கள் பேசினோம். அவரிடம் சமாதானம் பேசினோம். ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லை. தொண்டர்கள் , நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவரிடம் 15 நாட்கள் பேசினார்கள். அது எதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. அவர் தன்னை பற்றி மட்டுமே நினைத்தார். கட்சியை பற்றிய நினைக்கவில்லை. மக்கள் ஆதரவு உள்ளவர்களுக்குத்தான் ஆதரவு இருக்கும்.ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இருக்கிறதா? இருக்கிறது என்றால் பொதுக்குழுவிற்கு வாருங்கள்.

அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய மந்திரியாகவும் ஆகவேண்டும், வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை.

எப்படி இணைய முடியும்?எந்த அடிப்படையில் இணைப்பு பத்தி பேசுகிறார்?, கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்

ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீதி தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர், அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும் ?

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடனா இணைவது? தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி ஒன்றிணைய முடியும்? -

ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள்.

தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். யார் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்பதை யாரும் குறிப்பிடவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான், திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார். பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரம் தான், அவர் பதவிக்கு வரவேண்டுமென்றால் என்ன வேண்டுமானும் செய்வார்.

நான் எப்பொழுதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டேன். எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை என கூறினார்.


Next Story