எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் விரைந்து விசாரிக்க கோரி முறையிட திட்டம்


எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் விரைந்து விசாரிக்க கோரி முறையிட திட்டம்
x
தினத்தந்தி 4 July 2022 4:12 AM GMT (Updated: 4 July 2022 5:33 AM GMT)

எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் இன்று முறையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்க கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் இன்று முறையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தது. இதுதொடர்பான அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்குமாறு அதில் தெரிவித்திருந்தனர்.


Next Story