தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்: டிடிவி தினகரன்


தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 15 Dec 2022 1:48 AM GMT (Updated: 15 Dec 2022 7:06 AM GMT)

மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என்று தெரிய வில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருப்பூர்,

டி.டி.வி.தினகரன் திருப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என்று தெரிய வில்லை. இது அனைவரின் மனதிலும் எழும் கேள்விதான். வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து 2 முதல்-அமைச்சர்களை கூட அறிவிக்கலாம். தங்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்பு மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தற்போது சொல்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் எல்லாம் கட்சிக்கு பல தலைமுறையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் முக்கிய பதவிகள் கிடைக்கிறது என்று மனக்குமுறலை வெளிப்படுத்திவிட்டார். அவர் தெரிவித்ததைபோல் தி.மு.க.வில் பலருக்கு அந்த குமுறல் உள்ளது. திடீரென வந்தவர்களெல்லாம் அமைச்சர் ஆகிறார்கள்.

அ.ம.மு.க.வின் தேர்தல் கூட்டணி குறித்து 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் அறிவிக்கப்படும். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்றால் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்து வைத்தார்களே அவர்களால்தான் முடியும். அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடுகிற கட்சியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியும், அவரை சேர்ந்த ஒரு குழுவினரும் அதை வட்டார கட்சியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தில் சமுதாய கட்சியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story