அதிமுக அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பியது தமிழக தேர்தல் ஆணையம்


அதிமுக அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பியது தமிழக தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 2 Jan 2023 7:05 AM GMT (Updated: 2 Jan 2023 8:11 AM GMT)

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் எனக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் 'ஆர்.வி.எம்.' (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுதொடர்பாக வருகிற 16-ந் தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அம்மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 16-ந் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு விடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார். இந்த கடிதம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பெயரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலக முகவரிக்கு அனுப்பப்ட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் எழுதியிருப்பதால், அ.தி.மு.க.வில் அப்படி ஒரு பதவியே இல்லை எனக்கூறி அந்த கடிதத்தை தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்கு திரும்ப அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவிடம் கேட்ட போது, 'இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு அ.தி.மு.க.வுக்கு கடிதம் அனுப்பப்பட்டது' என்றார்.

மீண்டும் கடிதம்

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் எனக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.


Next Story