ராஜா வாய்க்காலில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி


ராஜா வாய்க்காலில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி
x

ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் மூழ்கி எலக்ட்ரீசியன் இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

எலக்ட்ரீசியன்

பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் லோகேஷ் (வயது 29). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான பரத்குமார் மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த லோகேஷ் காணாததால் வீட்டிற்கு சென்று விட்டதாக நினைத்து அவரது நண்பர்களான பரத்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு லோகேஷ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதி ராஜா வாய்க்காலில் மீனவர்கள் உதவியுடன் அவரை தேடியுள்ளனர்.

உடல் மீட்பு

இரவு நேரம் ஆகிவிட்டதால் வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் மீண்டும் நேற்று காலை நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஜேடர்பாளையம் போலீசார் லோகேஷை ராஜாவாய்க்காலில் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் ஜேடர்பாளையம் பரிசல்துறை அருகே உள்ள ராஜா வாய்க்கால் பகுதியில் கரை ஒதுங்கி இருந்த லோகேஷின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் எலக்ட்ரீசியன் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story