சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை ஒரு நாளுக்குள் துண்டிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை ஒரு நாளுக்குள் துண்டிக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 44 செங்கற்சூளைகளில், 32 சூளைகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் 118 செங்கற்சூளைகள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. மின் இணைப்பை துண்டிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்க கூடாது என அரசுத்தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மேலும், 118 சட்டவிரோத செங்கற்சூளைகளுக்கான மின் இணைப்பை ஒரு நாளில் துண்டித்து, மார்ச் 6-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மின்சார வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story