6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்


6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இ-நாம் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லூர், செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, அவலூர்பேட்டை, திண்டிவனம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை(இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஆன்லைன் மூலமாக தேசிய அளவிலான சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு இதுநாள் வரையில் நாடு முழுவதும் 1.73 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர். விவசாயிகள் மட்டுமல்லாமல் 2 லட்சம் வர்த்தகர்களும், மின்னணு தேசிய வேளாண் சந்தை தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருட்கள், இதன் மூலம் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

நல்ல விலை கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தை பொறுத்தவரையில் 2.15 லட்சம் விவசாயிகளும், 2912 வர்த்தகர்களும், 98 விவசாய உற்பத்தி அமைப்புகளும் இணைந்துள்ளனர். வேளாண் விளைபொருள் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்துவதும் அதிக அளவிலான சந்தைகளை அணுக வாய்ப்பு ஏற்படுத்தி தருவதும், அதிகளவிலான வணிகர்களை கொள்முதலில் பங்கேற்க செய்வதும், விரைவாக மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதும் மின்னணு பரிவர்த்தனையின் சிறப்பம்சங்கள் ஆகும்.

மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பிடத்திலிருந்து விற்பனை செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் 127 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் மறைமுக ஏலம் நடத்தப்பட்டு வியாபாரிகள் தங்களின் செல்போன் மூலம் விலை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக போட்டி ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தேசிய வேளாண் சந்தை மூலம் விற்று பயனடையுமாறும், வியாபாரிகள் 100 சதவீதம் மின்னணு தேசிய வேளாண் சந்தை முறையை பயன்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story