ராயக்கோட்டை அருகேகிராமத்துக்குள் 50 யானைகள் புகுந்து அட்டகாசம்பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின


ராயக்கோட்டை அருகேகிராமத்துக்குள் 50 யானைகள் புகுந்து அட்டகாசம்பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்துக்குள் புகுந்த 50 யானைகள் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

50 யானைகள் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள நாகமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 50-க்கும் மேற்பட்ட யானைகள் நாகமங்கலம் கிராமத்துக்குள் புகுந்தன. பின்னர் யானைகள் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள 4 ஏக்கர் நெல் மற்றும் தென்னை மரங்கள், சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 1½ ஏக்கரில் பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தின.

விரட்டும் பணி தீவிரம்

மேலும் கிருஷ்ணப்பா, நாகமங்கலத்தை சேர்ந்த மணி, லட்சுமணன், முரளி மற்றும் ஏராளமான விவசாயிகளின் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. இதையடுத்து கூட்டத்தில் இருந்து 30 யானைகள் பிரிந்து ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. 20 யானைகள் நாகமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளன.

இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனச்சரகர் பார்த்தசாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். வனத்துறையினர் நாகமங்கலம் கிராமத்தில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தையொட்டி உள்ள பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story