"ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசர சட்டம்; பா.ம.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி" - டாக்டர் ராமதாஸ்


ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசர சட்டம்; பா.ம.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - டாக்டர் ராமதாஸ்
x

ஆன்லைன் சூதாட்டத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்கும் வகையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் வரவேற்கத்தக்கது என்றும் இது பா.ம.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது;-

"தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பாமக தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பாமக தான் காரணம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக அறிவித்த போராட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமிழக அரசின் அறிவிப்பு வந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கும், ஆக்கப்பூர்வ அரசியலுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இதில் பாமக பெருமிதமடைகிறது.

வல்லுநர் குழுவின் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெறப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த தாமதத்திற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story