அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்


அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்
x
தினத்தந்தி 15 July 2023 7:28 AM GMT (Updated: 15 July 2023 9:22 AM GMT)

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த 3 நாள் விசாரணை நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.அதில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.

நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று உறுதி செய்தார் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமலாக்கதுறை சட்ட விதிகளின் படி தான் கைது செய்துள்ளது. செந்தில்பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்கத்துறை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது. செந்தில்பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என நீதிபதி கூறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,

வரும் 24-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த தீர்ப்புகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதியான முடிவை எடுக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் வலியுறுத்தி உள்ளது.

தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story