பொறியியல் கலந்தாய்வு: வருகிற 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி


பொறியியல் கலந்தாய்வு: வருகிற 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி
x
தினத்தந்தி 8 Jun 2022 7:57 AM GMT (Updated: 8 Jun 2022 8:29 AM GMT)

பொறியியல் கலந்தாய்விற்கு வருகிற 20ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் கட்டணத்தில் மாற்றமில்லை. கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என தனி குழு அமைக்கப்படும்

பொறியியல் கலந்தாய்விற்கு மாணவர்கள் ஜூன் 20-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள்.

ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பொறியியல் சேர்க்கை குறித்து மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story