கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருவள்ளூர் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவர் ஆங்கிலம் படிக்க கஷ்டமாக இருப்பதாக தந்தையிடம் செல்போனில் கூறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

திருவள்ளூர்

என்ஜினீயரிங் மாணவர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த காவாலி, கந்தவரா கிராமத்தை சேர்ந்தவர் பிச்சு ரெட்டி. இவரது மகன் மதரமட்லா சரண் தேஜா (வயது 18). இவர் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வந்த இவா் உடன் தங்கி இருந்தவர்களுடன் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடன் ஒரே அறையில் தங்கி இருந்த சக மாணவர் வாக்காட்டி ஸ்ரீமந்த் நேற்று முன்தினம் பக்கத்து அறைக்கு படிப்பதற்காக சென்றார். பின்னர் இரவு 10.30 மணி அளவில் அந்த மாணவர் தனது அறைக்கு வந்தபோது மதரமட்லா சரண் தேஜா தூங்கிக்கொண்டிருந்தார். இதனால் கதவை லேசாக சாத்தி விட்டு மீண்டும் பக்கத்து அறைக்கு சென்று மாணவர்களுடன் படித்துவிட்டு அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.

தற்கொலை

இதையடுத்து நேற்று காலை வாக்காட்டி ஸ்ரீமந்த் தன்னுடைய அறைக்கு வந்தார். அப்போது மதரமட்லா சரண் தேஜா அறையில் உள்ள சிமெண்ட் ஜாலியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் உயிரிழந்த மாணவர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர்.

ஆங்கிலம் படிக்க கஷ்டமாக உள்ளது

முதற்கட்ட விசாரணையாக அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 தினங்களுக்கு முன்பு அவர் தனது தந்தைக்கு போன் செய்த மதரமட்லா சரண் தேஜா எனக்கு ஆங்கிலம் படிக்க கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதையடுத்து அவரது தந்தை அவரது வீட்டில் அருகில் இருக்கும் ஒரு ஆசிரியரிடம் செல்போனை கொடுத்து மகனிடம் பேச வைத்திருக்கிறார். அப்பொழுது அவர் மதரமட்லா சரண் தேஜாவிடம் நீ ஆங்கிலத்தில் தான் இதுவரை படித்து வந்தாய் கஷ்டப்படாமல் நன்றாக படி என்று ஆலோசனை கொடுத்துள்ளார். இந்த பதிவு அவரது செல்போனில் பதிவாகியிருப்பது தெரிய வந்தது.

எனவே ஆங்கிலம் படிப்பதற்கு கஷ்டமாக இருந்ததால் மாணவர் தற்கொலை கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணம் இருக்குமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story