வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்- தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா? தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து


வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்-  தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?  தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து
x

வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்- தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா? தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

திருநெல்வேலி

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று எல்லா இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள்.

வடமாநிலக்காரர்கள்

தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்களில் முன்பு எல்லாம் மண்வாசனையை நுகர முடியும். அதாவது அங்கு வேலை செய்யும் ஆண், பெண் இருபாலரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசுகிற தமிழே அதை அடையாளம் காட்டும்.

இன்று அந்த நிறுவனங்களில்கூட திக்கித்திக்கி இந்தி கலந்து தமிழ் பேசுகிற வட மாநிலத்தவரை காண முடிகிறது.

அதாவது பானி பூரி விற்பதில் தொடங்கி, கட்டிட வேலைகள், மெட்ரோ பணிகள், ஓட்டல் வேலைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், இறைச்சி கடைகள், மீன் வெட்டுதல், முடி வெட்டுதல் என அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டனர்.

சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் பரவி விட்டனர்.

திணித்துக்கொள்கிறோம்

இந்தி திணிப்பை எதிர்த்துவரும் நாம், இந்திக்காரர்களை நமக்கு நாமே திணித்து கொண்டிருக்கிறோம். இதை ஆதங்கப்பட்டோ, பொறாமைப்பட்டோ கூறவில்லை. அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நாம் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும். குறைந்த சம்பளம் என்றாலும் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள். அதை வரவேற்றுத்தான் தீரவேண்டும்.

நம்மவர்கள் என்ன செய்கிறார்கள்? பசி வயிற்றில் இருந்தால்தானே அவர்களுக்கு வேலையில் பக்திவரும்? இலவசங்கள் அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டதாக யாரை கேட்டாலும் சொல்கிறார்கள்.

அர்ப்பணிப்பு இல்லை

எந்த வேலை என்றாலும் நம்மவர்கள் கூடுதல் சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளை குறைந்த நேரம் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அர்ப்பணிப்பு குணம் குறைந்து போய்விட்டது. 'இஷ்டம் இருந்தால் வேலை தா! இல்லை என்றால் போ!' என்ற மனநிலையில் இருக்கிறார்கள். கிராமங்களில்கூட இந்த நிலைதான் இருக்கிறது.

அதனால்தான் நம்மவர்கள் இருந்தும் வடமாநில தொழிலாளர்களுக்கு நாமே சிவப்பு கம்பளம் விரிக்க நேருவதாக சொல்கிறார்கள்.

இதுபற்றி பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதை காண்போம்.

குறைந்த சம்பளம்

நெல்லையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அப்துல் ரசாக்:- வடமாநில தொழிலாளர்கள் வருகை, உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கக்கூடியதாக தான் உள்ளது. ஆனால் அவர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் ஷெட் அமைத்து தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். காலை 8 மணிக்கு பணியை தொடங்கி விடுகிறார்கள். அவர்களது பங்களிப்பு மூலம், கட்டுமானத்தை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்து ஒப்படைக்க முடிகிறது. அதனால் கட்டுமான நிறுவனத்தினர் வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துகிறார்கள்.

கொக்கிரகுளத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன காவலாளி வெங்கடேஷ்:-

வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு பல வகையில் அழைத்து வரப்படுகிறார்கள். கூலி ஒப்பந்தம், உணவு, வேலை செய்யும் இடம் ஆகியவற்றை அதற்குரிய முகவர்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் முடிவு செய்கிறார்கள். அவர்களை பணியிடத்தில் இந்தி அல்லது வடமாநில மொழி தெரிந்த மேஸ்திரிகள் வேலை வாங்குகிறார்கள். நெல்லை, தூத்துக்குடிக்கு வந்து நீண்ட நாட்கள் ஆன வடமாநில தொழிலாளர்கள், நம்மூர் ேசாறு, சாம்பார் உள்ளிட்ட உணவுக்கு மாறி விட்டனர். குறைந்த சம்பளம், அதிக வேலை என்ற அடிப்படையில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

முறைப்படுத்த வேண்டும்

கணினி மைய நிர்வாகி முகமது முஸ்தபா:-

வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தமிழர்கள் குறிப்பிட்ட சம்பளத்தை எதிர்பார்த்து வேலைக்கு செல்லும் நிலையில், அவர்கள் சாப்பாடு மற்றும் குறைந்த சம்பளத்தை எதிர்பார்த்து வேலைக்கு வந்து விடுகிறார்கள். இவர்களை ஒழுங்குப்படுத்த வேலையில் அமர்த்தும் நிறுவனத்தில் ஆதார் அட்டை, முகவரி ஆகிய விவரங்களை சேகரித்த பிறகே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது தமிழர்களின் வேலைவாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில தலைவர் நெல்லை எஸ்.மகாலிங்கம்:- தமிழகம் முழுவதும் கட்டிட தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஏற்கனவே 13 லட்சம் பேர் இருந்தனர். தற்போது மேலும் 7 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். தமிழக அரசு கட்டிட தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வடமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர்கள் அதிகளவு வந்திருப்பதால் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நம்முடைய தொழிலாளர்கள் கட்டுமான வேலையை நேர்த்தியாகவும், திறமையாகவும் செய்வார்கள். ஆனால் வடமாநில தொழிலாளர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. எனவே தமிழக அரசு முதல் கட்டமாக, அரசு கட்டுமான ஒப்பந்த பணிகளில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வர வேண்டும்.

தென்காசி கீழப்புலியூரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் பாலாமணி:-

வடமாநில தொழிலாளர்களால் நமக்கு பெரிய அளவில் லாபம் ஒன்றும் கிடையாது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழிலாளர்களாக வேலை பார்க்கிறார்கள். குறைந்த சம்பளத்துக்கு கூட வேலை செய்கிறார்கள். ஆனால் இங்குள்ள பொருளாதாரம் அனைத்தும் வடமாநிலத்துக்கு செல்கிறது. மேலும் அவர்களது வேலை திருப்திகரமாக இருப்பது இல்லை. அவர்களில் பலர் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை நம்பி நாம் வேலையை விட்டு செல்ல முடியாது. இங்குள்ள தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பேசி, வேலை வழங்குவது தான் நல்லது.

அனுமதிக்கக் கூடாது

தென்காசியை சேர்ந்த மாரிமுத்து:-

வடமாநில தொழிலாளர்கள் தற்போது பல இடங்களிலும் பெருகி வருகிறார்கள். இதனால் இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பலர் வறுமையில் வாடுகிறார்கள். எனவே, வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் தெரிந்தவர்களை வைத்திருப்பதற்கும், தெரியாதவர்களை வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஏதாவது ஒரு தவறு செய்துவிட்டு தலைமறைவாகி விட்டால் அவர்களை நாம் கண்டுபிடிப்பது கஷ்டம். எனவே, வடமாநில தொழிலாளர்களை அனுமதிக்கக் கூடாது.

தமிழகத்தில் பணியாற்றி வரும் பீகாரை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சந்து குமார் யாதவ்:-

எங்கள் மாநிலத்தில் வேலைவாய்ப்பு குறைவு, அப்படியே ஓட்டலில் வேலை கிடைத்தாலும் மாதம் ரூ.7 ஆயிரம் சம்பளம் தருவார்கள். அதற்கு நாங்கள் 12 முதல் 15 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் 10 மணி நேரம் வேலை செய்வதற்கே எங்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் தருகிறார்கள். இதனால், எங்கள் வருமானம் 2 மடங்கு அதிகரிக்கிறது. இது போக தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஓட்டலில் இலவசமாக போய்விடுவதால், எங்களுக்கு பெரிதாக செலவு ஏதும் இல்லை. எனவே, நாங்கள் பணத்தை மிச்சப்படுத்தி வீட்டிற்கு அனுப்புகிறோம். அங்கு எங்கள் குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாங்கள் 6 அல்லது 7 மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு சென்று 1 அல்லது 2 மாதங்கள் ஊரில் தங்கி விழாக்களில் கலந்துவிட்டு மீண்டும் வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வங்கி ஊழியர் ஆதங்கம்

இது ஒருபுறம் இருக்க ரெயில்வே, வங்கிகள், தபால் துறை, தொலை தொடர்புத்துறை (பி.எஸ்.என்.எல்.) என அனைத்து மத்திய அரசு துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கமே அதிக அளவில் இருக்கிறது.

வங்கிகளில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் குறித்து பெயர் சொல்ல விரும்பாத வங்கி ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கி மேலாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் இந்திக்காரர்கள் பணியாற்றியதால், சரியாக தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்களே அந்த வங்கியை பூட்டி சீல் வைத்த சம்பவம் நடந்து உள்ளது. வட மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் வங்கி தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை அவர்களே தயாரிப்பதாக ஒரு தகவல் உள்ளது. மேலும், அவர்களின் தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதும் வாய்ப்பும் உள்ளதால், வங்கி துணை அதிகாரிகள் பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வாகின்றனர்.

இவ்வாறு தேர்வாகி வரும் வடமாநிலத்தவர்களுக்கு வங்கிகள் குறித்த புலமையும், ஆங்கில புலமையும் குறைவாகவே இருக்கும். இதனால், தமிழக வங்கி பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலும், வங்கிகளின் தலைவர்கள், செயல் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் வடமாநிலத்தவர்களே இருப்பதால் பதவி உயர்விலும் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வடமாநிலத்தவர்கள் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தமிழ் மொழி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்க முடியாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஆனால், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளின் குளறுபடிகளால் இது போன்று தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஆராய வேண்டும்

இந்தியை ஏற்க மறுக்கிறீர்கள், இந்திக்காரர்கள் வருவதை மறுக்காமல் மவுனமாக இருக்கறீர்களே ஏன்? என்று சிலரிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

சிலர் என் பிள்ளைகளை எல்லாம் இந்தி படிக்க வைக்கிறேன் என்று பெருமையாக சொல்கிறார்கள். தாராளமாக படிக்க வையுங்கள். ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு எல்லாம் வேண்டாம். எங்களிடம் கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்று இந்தியை திணிக்காதீர்கள்.

உலகம் சுற்ற ஆங்கிலம் போதும். தமிழ்நாட்டில் தாய்மொழி போதும்.

எங்கள் பிள்ளைகள் ஒருவேளை வடமாநிலங்களுக்கு வேலைக்கு போக நேர்ந்தால் மும்பை தமிழர்களைப் போல் பேசப் பழகிக்கொள்வார்கள். இந்தி படித்தால் எதிர்காலமும், வேலை வாய்ப்பும் இருக்கும் என்று கருதுகிறீர்கள். அப்படி என்றால் இந்தி படித்தவர்கள் எல்லாம் வேலை தேடி ஏன் தெற்கே ஓடிவருகிறார்கள்?.

இந்தியை ஏற்றுக்கொண்டால் நமது தாய்மொழியின் புழக்கத்தை அது நீர்த்துப்போக செய்யும். அண்டையில் இருக்கும் கர்நாடக மாநிலமும், வடக்கே இருக்கும் மேற்குவங்காள மாநிலமும் அதை இப்போதுதான் உணர்ந்து வருகின்றன. அதை முன்கூட்டியே உணர்ந்துதான் நம்மவர்கள் இந்தியை ஏற்கவில்லை.

இந்திக்காரர்களை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. பிழைப்பு தேடி வந்து இருக்கிறார்கள். உழைக்கிறார்கள். அந்த உழைப்பு நமது நாட்டுக்கு உதவியாக இருக்கிறது. நம்மவர்கள் பிழைப்புதேடி மும்பை போகவில்லையா? கர்நாடகம், கேரளா போகவில்லையா? அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும்.

அதேநேரம் அவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே போவதை தமிழக அரசு கண்டுகொள்ளாமலும் இருந்துவிடக்கூடாது. அவர்களின் வருகையால் ஏற்பட்டு இருக்கும் தாக்கம், பெருகி இருக்கும் குற்றம், நமது வேலைகளைச் செய்ய நம்மிடம் தொழிலாளர்கள் இல்லையா? இருந்தால் ஏன் அவர்கள் அதைச் செய்ய முன்வருவது இல்லை? என்ற கோணங்களிலும் ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story