ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை - விஜயகாந்த் குற்றச்சாட்டு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை - விஜயகாந்த் குற்றச்சாட்டு
x

வாக்குச்சாவடி மையங்களில் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை,

வாக்குச்சாவடி மையங்களில் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை முதல் நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகியிருக்கும் நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்படாததால், பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகவும் சோர்வடைந்து மயக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை தடுக்காத தேர்தல் ஆணையம் தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களிலும் தேவையான ஏற்பாடுகளை செய்யவில்லை.

தேர்தல் புகார்களையும் தடுக்காமல், தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் செய்யாமல் யாருக்காக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. வெயில் காலம் என்பதால் வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, மக்களை பல மணி நேரம் காத்திருக்க வைக்காமல் விரைந்து ஓட்டு அளிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story