ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உயிரிழப்புகளை தடுக்க படித்துறை அமைக்க வேண்டும்; நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா?


ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில்  உயிரிழப்புகளை தடுக்க  படித்துறை அமைக்க வேண்டும்;  நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
x

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உயிரிழப்புகளை தடுக்க படித்துறை அமைப்பது என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உயிரிழப்புகளை தடுக்க படித்துறை அமைப்பது என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரிக்கரை

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் சோழீஸ்வரர், ராகவேந்திரா, பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடிவிட்டு கோவிலுக்கு செல்கிறார்கள். மேலும், கோவிலுக்கு தேவையான புனிதநீரும் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஏராளமான கோவில்களில் திருவிழா நடக்கும்போது பக்தர்கள் காவிரிக்கரைக்கு சென்று புனிதநீராடிவிட்டு அங்கிருந்து புனிதநீர் எடுத்து கோவிலுக்கு செல்கிறார்கள்.

புண்ணிய தலமாக கருதப்படும் காவிரிக்கரையில் மாதந்தோறும் வரும் அமாவாசையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மகாளய அமாவாசையின்போது காவிரிக்கரையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது பக்தர்கள் பாதுகாப்பின்றி குளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க காவிரிக்கரையில் படித்துறை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து உள்ளது.

படித்துறை

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம் கூறியதாவது:-

கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் முனியப்பன் நகர் உள்ளது. அங்கு 220 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு காவிரிக்கரை வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கு சாலை வசதி கிடையாது. சாலை வசதியுடன் கூடிய படித்துறை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். படித்துறை அமைத்து விட்டால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க முடியும். உயிரிழப்பை தடுக்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிக்கரையில் படித்துறை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே மாநகராட்சி சார்பில் படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தார் சாலை

காவிரிக்கரை முனியப்பன் நகரை சேர்ந்த முருகன் கூறியதாவது:-

காவிரிக்கரையில் படித்துறை அமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது முனியப்பன்நகருக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படுகிறது. இதனால் தனித்தீவாக மாறிவிடுகிறது. எனவே காவிரிக்கரையில் இருந்து முனியப்பன்நகர் வரை நீளமான சுவர் எழுப்பி 3 இடங்களில் படித்துறை அமைக்கலாம்.

ஆத்மா மின்மயானமும் உள்ளதால் இறுதி சடங்கில் பங்கேற்க வருபவர்களும் படித்துறை இல்லாத காரணத்தினால் குளிக்காமல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுவே படித்துறை அமைக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டால், ஆற்றில் குளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கழிப்பறை

ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ஹேமலதா சந்தோஷ்குமார் கூறுகையில், "காவிரிக்கரையில் படித்துறை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே 2 முறை மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும். இதேபோல் கழிப்பறை வசதியும் செய்து கொடுக்க வேண்டும். இரவு நேரத்தில் பெண்களும் இருளில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலை அமைத்து தெருவிளக்குகள் பொருத்தினால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக அமையும்", என்றார்.


Next Story