சின்னப்பனையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு


சின்னப்பனையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு
x

சின்னப்பனையூரில் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

நீண்டநாள் கோரிக்கை

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், முதலைப்பட்டி, சேப்ளாப்பட்டி, தளிஞ்சி, ஆர்ச்சம்பட்டி ஆகிய 5 ஊராட்சிகள் ஆற்று பாசனமாக இருந்து வருகிறது. மேலும் இந்த ஊராட்சியை சேர்ந்த பல கிராமங்கள் குளம் மற்றும் கிணற்று பாசன பகுதியாகவும் உள்ளது. இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல்லை அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் உணவுக்கு தேவையானது போக மீதமுள்ள நெல்லை திருச்சி, மணப்பாறை, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர். அப்போது இடைத்தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை நடைபெற்று வந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர். இதனால் தோகைமலை பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, இடைத் தரகர்கள் இல்லாமல் அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கே விவசாயிகளிடம் இருந்து நெல்லை பெறவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு

இதையடுத்து கோரிக்கையை ஏற்று சின்னப்பனையூர் சமுதாயக்கூடம் அருகே தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் இந்தாண்டிற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் 2 ரகங்களாக நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதில் அரசு நிர்ணய விலையாக சண்ண ரகம் (கிரேடு ஏ) ஒரு கிலோ 21 ரூபாய் 60 பைசாவிற்கும், மோட்டா (பெரியது கிரேடு சி) ரகம் ஒரு கிலோ 21 ரூபாய் 15 பைசாவிற்கும் பெறப்படுகிறது.

முன்பதிவு அவசியம்

மேலும் நெல்லில் இருந்து கரிமம் மற்றும் கணிமம் தரம்பார்த்து எடுக்கப்படுகிறது. ஒரு மூட்டைக்கு சாக்குடன் 40.580 கிலோவிற்கு மிகாமல் எடுக்கப்பட்டு அதில் நீலம் நிறம் கொண்ட சணலால் 14 சுத்து தையல் அமைக்கப்படுகிறது. இங்கு விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நேரடியாக வந்து முன்பதிவு செய்ய வேண்டும். நேரடியாக வந்து முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு பதிவு வரிசைப்படி கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

முன்பதிவு செய்வதற்கு கிராம நிர்வாக அதிகாரி சான்று பெற்ற அடங்கள், விவசாயிகளின் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, நிலத்தின் சிட்டா ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். கொள்முதல் நிலையத்தில் அரசு வழங்கும் சாக்கில் நெல்லை பிடிப்பதால் சாக்குடன் நெல்லை கொண்டு வர தேவையில்லை. குவியலாக கொண்டு வந்தால் போதும், கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு 3 நாட்களில் தங்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

இந்த கொள்முதல் நிலையமானது அறுவடை பருவ காலம் முடியும் வரை செயல்படும், கொள்முதல் செய்யப்படும் நெல் அய்யர்மலையில் உள்ள தமிழ்நாடு அரசின் தானியக்கிடங்கில் சேமிக்கபடும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story