"கருணாநிதி சிலை திறப்பு விழாவை சிறப்பிக்க அனைவரும் வாருங்கள்"- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு


கருணாநிதி சிலை திறப்பு விழாவை சிறப்பிக்க அனைவரும் வாருங்கள்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
x

கருணாநிதி சிலை திறப்பு விழாவை சிறப்பிக்க அனைவரும் வாருங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

சென்னை

சென்னை அண்ணா சாலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமையும், கருணாநிதி சிலை திறப்பு விழாவை சிறப்பிக்க அனைவரும் வாருங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

எழுச்சிமிகு சிந்தனையால், ஏற்றமிகு பேச்சாற்றலால், புரட்சிகர எழுத்துகளால், புதுமையான திட்டங்களால், இந்தியத் திருநாடு எண்ணி எண்ணிப் போற்றுகிற வகையில், தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவர் நம் ஆருயிர்த் தலைவர் கருணாநிதி.

அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவச் சிலை, தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையில், தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வரவேற்புரையாற்றிட, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மே 28-ந்தேதி (இன்று) சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் திறந்து வைத்திட இருக்கிறார். அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

சென்னை அண்ணா சாலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைவர் கருணாநிதிக்கு உருவச் சிலை நிறுவப்படுகிறது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து எவராலும் அகற்ற முடியாத தனிப்பெரும் சாதனையாளர், தளராத உழைப்பாளி, சமரசமில்லாத சமூகநீதிப் போராளி, நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதியின் உருவச்சிலை திறக்கும் நிகழ்வு, சென்னையில் மகத்தான விழாவாக நடைபெறுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவருக்குத் உருவச் சிலை கண்டோம். திருச்சியில், ஈரோட்டில், தூத்துக்குடியில் இன்னும் பல நகரங்களில் தி.மு.க. சார்பில் சிலை அமைத்து மகிழ்ந்தோம். அதனை இன்னும் பல ஊர்களிலும் தொடர்கிறோம்.

அவர் சிலையாக மட்டுமல்ல, நம் நெஞ்சில் நிலையாக வீற்றிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார். இயற்கை அவரை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டாலும், நம் இதயத்துடிப்பினில் அவரே நிறைந்திருக்கிறார். எந்நாளும் வழிநடத்துகிறார். மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது அவர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம்.

அந்த இலக்கணத்தின்படி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்.

முதல்-அமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத்தர வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story