குன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணி அரியவகை பொருட்கள் கண்டெடுப்பு


குன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணி அரியவகை பொருட்கள் கண்டெடுப்பு
x

குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளி முத்து தலைமையில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் அரியவகை பொருட்களான கண்ணாடி மணிகள் வட்ட சில்கள், இரும்பாலான ஆயுதம், சுடுமண்ணால் ஆன பொம்மைகள். முத்திரை சீல், 2 தங்க அணிகலன்கள் மற்றும் பழைய கற்காலத்தில் பயன்படுத்திய கருவிகள் உள்ளிட்டவை கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கிய நிலையில் தங்க ஆபரணத்திலான சிறு தகடு. ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள், சுடுமன் கருவி, செப்பு பொருட்கள், சுடுமண் பொம்மைகள், செப்பு வளையங்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் கிடைத்தது.

அரிய பொருட்கள் கண்டெடுப்பு

தற்போது அகழாய்வில் தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானை ஓடு, சுடுமண் பெண் உருவம், சுடுமண் முத்திரை, உடைந்த சுடுமண் பொம்மை, குவளை, சுடுமண் கழுத்தணி, சூதுபவள மணிகள், இரும்பு மற்றும் செம்பு பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 800 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த கண்டுபிடிப்புகள் குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தெரிவிக்கையில், 'வடக்குப்பட்டில் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு கிடைத்திருப்பது மிகவும் முக்கிய கண்டுபிடிப்பு ஆகும். இந்த பானை ஓட்டில் "மத்தி" என்று மூன்று எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை வட தமிழகத்தில் பட்டரைப்பெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதன் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம் என தெரிவித்தார்.


Next Story