திருச்சியில் பரபரப்பு: பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு...!


திருச்சியில் பரபரப்பு: பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு...!
x

திருச்சியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர்,

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் பாதுகாப்பு இல்லாமல் பல மாதங்களாக உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மாநகராட்சியின் 40-வது வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் சாகர் பானு(வயது65) என்பவர் இன்று அதிகாலை தவறி விழுந்துள்ளார். குழியில் தண்ணீர் இருந்ததால் மூதாட்டி சாகர் பானு நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் குழிக்குள் மூதாட்டி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூர் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story