ராசிபுரத்தில் 9-வது தேசிய கைத்தறி கண்காட்சி கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்


ராசிபுரத்தில் 9-வது தேசிய கைத்தறி கண்காட்சி கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Aug 2023 7:00 PM GMT (Updated: 7 Aug 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரத்தில் 9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

கைத்தறி கண்காட்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் உமா கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் அவர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் உமா பேசியதாவது:- கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மாவட்ட தொழிலாளர் நல வாரியத்துடன் இணைந்து அமைப்புசாரா நெசவாளர்களை வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் சிறப்பு முகாமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நெசவாளர்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

முத்ரா கடன் உதவி

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் உதவிகளும் வழங்கப்படுகிறது. நெசவாளர்கள் இத்திட்டங்களை பயன்படுத்தி தொடர்ந்து சிறப்பாக நெசவு தொழிலை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டுகள், வேட்டிகள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம் இடம்பெற்றுள்ளன. விழாவில் கைத்தறி உதவி இயக்குனர் பழனிகுமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி, கைத்தறித்துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே ராசிபுரம் நகராட்சி வேலா பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story