கலெக்டர் அலுவலகத்தில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் கண்காட்சி - அமைச்சர்கள் பங்கேற்பு


கலெக்டர் அலுவலகத்தில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் கண்காட்சி - அமைச்சர்கள் பங்கேற்பு
x

கலெக்டர் அலுவலகத்தில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் கண்காட்சியை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்.

சென்னை

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மக்கும் மற்றும் மக்காத குப்பை கண்காட்சியை நேரில் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை தொடங்கி வைத்து செல்பி ஸ்டாண்டில் நின்று அமைச்சர்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறிஸ்தவர் மகளிர், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரிய பயனாளிகள் 536 பேருக்கு ரூ.46 லட்சத்து 28 ஆயிரத்து 641 மதிப்பிலான நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை அமைச்சர்கள் ஆவடி சா.மு.நாசர், செஞ்சி கே. மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சந்திரன், கோவிந்தராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் ராஜவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story