வெங்காய கொட்டகையில் வெடி பொருட்கள் பறிமுதல்


வெங்காய கொட்டகையில் வெடி பொருட்கள் பறிமுதல்
x

வெங்காய கொட்டகையில் இருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நத்தக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீரங்கன். இவரது மனைவி முத்துகண்ணு (வயது 70). இவர் கடந்த 19-ந் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அன்று இரவு முத்துக்கண்ணு தேனூரில் உள்ள ரவி (51) என்பவரது வயலில் வன விலங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் திருச்சி தடயவியல் துறையினர் ரவியின் வயலுக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது ரவியின் வெங்காய கொட்டகையில் வெடிபொருட்களான 12 டெட்டனேட்டர், 8 பாக்கெட் ஜெல் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை தடயவியல் துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிணறு வெட்டும் வேலை செய்து வந்ததாகவும், அப்போது பயன்படுத்தி விட்டு மீதமிருந்த வெடிபொருட்களை வெங்காய கொட்டகையில் மறைத்து வைத்திருந்தாகவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story