மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில்


மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

மதுரை

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

மதுரை-திண்டுக்கல்பாசஞ்சர் ரெயில்

கொரோனா கட்டுப்பாடுகளால் ரெயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளன. அத்துடன், பாசஞ்சர் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த ரெயிலால் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராமப்புற பயணிகள் பயனடைந்து வந்தனர். அதில் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்களுக்கு இந்த ரெயில் வரப்பிரசாதமாக இருந்தது. எனவே, தொடர்ந்து இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்று சோழவந்தான் பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஏனெனில், இந்த ரெயிலில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தினசரி பயணம் செய்து வந்தனர்.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

இது குறித்து, கடந்த மாதம் 24-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து, மதுரை-திண்டுக்கல் பாசஞ்சர் ரெயில் மீண்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ரெயில்களின் இயக்கம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், மதுரை கோட்ட ரெயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு சோழவந்தான் பகுதி பயணிகளிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த ரெயில் (வ.எண்.06609) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு காலை 9.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06610) மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள், அம்பாத்துறை, கொடைரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல்நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 11 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story