அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற கால நீட்டிப்பு


அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற கால நீட்டிப்பு
x
தினத்தந்தி 11 March 2023 7:16 PM GMT (Updated: 11 March 2023 7:36 PM GMT)

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை கடந்த 14.6.2018-ல் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலையில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் என 24.6.2022 முதல் 31.12.2022 வரை அரசால் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story