கடைகளில் போலி 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' ஒட்டி நூதன முறையில் பண மோசடி


கடைகளில் போலி கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை ஒட்டி நூதன முறையில் பண மோசடி
x

கடைகளில் போலி ‘கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை’ ஒட்டி நூதன முறையில் பண மோசடி: ஊர்க்காவல் படை வீரர் கைது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). இவர், தனது வீட்டின் முன் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை ஆன்-லைன் மூலம் அனுப்ப 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' கடையில் ஒட்டி இருந்தார். கடந்த சில தினங்களாக வாடிக்கையாளர்களிடம் இருந்து 'கியூ.ஆர்.கோடு' மூலம் பணம் பரிமாற்றம் ஆகவில்லை. தனது கடையில் உள்ள 'கியூ.ஆர்.கோடு' ஸ்டிக்கருக்கு பதிலாக போலியாக வேறொரு 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' ஒட்டி மோசடி நடந்து இருப்பதாக கண்ணகி நகர் போலீசில் ஆனந்த் புகார் அளித்தார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது, கண்ணகி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் (21) என்பதும், இவர் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றுவதும் தெரிந்தது. இவர், இதுபோல் 7 கடைகளில் உள்ள 'கியூ.ஆர்.கோடு' ஸ்டிக்கருக்கு மேல் தனது வங்கி கணக்கிற்கு பணம் செல்லும் வகையில் போலியான 'கியூ.ஆர்.கோடு' ஸ்டிக்கரை ஒட்டி பண மோசடி செய்ததும் தெரிந்தது. சென்னை மாநகர போலீசில் போலீஸ்காரராக பணியாற்றுவது போல் போலியான அடையாள அட்டையும் வைத்து இருந்தார். ஸ்ரீதரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story