மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்


மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
x

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை காண இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பார்வையாளர்கள் பிரதான நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக போட்டி நடைபெறும் 2-வது அரங்கில் மட்டுமே ஆன்லைனில் நுழைவு சீட்டு பதிவு செய்துவிட்டு வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 200 செஸ் போர்டுகள் அமைத்து செஸ் போட்டி நடைபெறும் முதல் அரங்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அங்கு கேலரி அமைக்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள் மட்டுமே முதலாவது அரங்கில் செஸ் போட்டியை காண சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக முதன் முதலாக இந்திய அளவில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெறுவதால் இதனை காண பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் பிரதான நுழைவு வாயில் அருகில் கவுண்ட்டர்களில் நுழைவு சீட்டு வழங்குவார்கள் என இங்கு வந்து பார்த்துவிட்டு வழங்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது.

பிரதான நுழைவு வாயில் பகுதியில் நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் ஆன்லைன் பதிவு மற்றும் சிறப்பு அனுமதி அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதித்தனர்.


Next Story