நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை
![நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை](https://media.dailythanthi.com/h-upload/2022/07/26/792248-murder.webp)
வாணியம்பாடி அருகே உறவினர்களிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி அருகே உறவினர்களிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50), விவசாயி. இவருக்கும் இவரது உறவினர்களான கோவிந்தன் மற்றும் சக்தி ஆகியோரிடையே சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சின்னமோட்டூர் பகுதியில் வெங்கடேசனுக்கும், கோவிந்தனுக்கும் இடையே நிலம் சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அடித்து கொலை
இதில் கோவிந்தன் மற்றும் சக்தி ஆகியோர் வெங்கடேசனை உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2 பேர் கைது
இச்சம்பவம் குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தன் மற்றும் சக்தியை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.