குடும்ப பிரச்சினையில் விவசாயி தற்கொலை


குடும்ப பிரச்சினையில் விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 14 July 2022 6:45 PM GMT (Updated: 14 July 2022 6:45 PM GMT)

ஊத்தங்கரை அருகே குடும்ப பிரச்சினையில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய மகனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே குடும்ப பிரச்சினையில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய மகனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியுடன் தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கெங்கப்பிராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 60), விவசாயி. இவருடைய மகன் வினோத்குமார் (27). இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு புனிதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. வினோத்குமாருக்கும், புனிதாவிற்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புனிதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வினோத்குமார் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய ராஜாவும் மனம் உடைந்து காணப்பட்டார்.

தந்தை- மகனும்...

இருவரும் திடீரென தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலையில் வீட்டின் மாடியில் இருவரும் தனித்தனியாக தூக்கில் தொங்கி உள்ளனர். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வினோத்குமாரை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த ராஜா உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினையில் மனம் உடைந்து இருவரும் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story