விவசாயி அடித்துக்கொலை


விவசாயி அடித்துக்கொலை
x

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

ராசிபுரம்

விவசாயி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). விவசாயி. மேலும் இவர் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். முருகேசனுக்கும், அவரது சகோதரர் பாதருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் முருகேசன் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற சகோதரர் பாதரின் மகன் தினேஷ்குமார் (31), அவரிடம் நிலத்தை ஏன் பிரித்து தரவில்லை என கேட்டதாக தெரிகிறது. தினேஷ்குமாருக்கு ஆதரவாக முருகேசன் மகளின் மருமகன் விஜயபிரகாஷ், அவரது தம்பி செந்தில்குமார் ஆகியோரும் பேசினர்.

பரிதாப சாவு

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார் மற்றும் அவரது உறவினர்களும் கட்டையால் முருகேசனை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுபற்றி ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான அவர்களது உறவினர்கள் விஜயபிரகாஷ், செந்தில்குமார் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலத்தில் உறவினர்கள் மறியலுக்கு முயற்சி

இதனிடையே, கொலையுண்ட விவசாயி முருகேசனின் உறவினர்கள் நேற்று மதியம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கொலையாளிகளை உடனே கைது செயய் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story