வீட்டின் முன்பு கீரை விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம்


வீட்டின் முன்பு கீரை விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:46 PM GMT)

முதுகுளத்தூர் அருகே பல கிராமங்களில் வீட்டின் முன்பு கீரை விதைத்து விவசாயிகள் ஆர்வமுடன் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

வீட்டின் முன்பு கீரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்துதான் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குகின்றனர். குறிப்பாக முதுகுளத்தூர் தாலுகாவில் நெல் விவசாயத்தை விட மிளகாய், பருத்தி விவசாயமே அதிகமாக நடைபெற்று வருகின்றது. அந்த மண்ணில் நெல்லை விட மிளகாய், பருத்தியை பயிரிடுவதற்கு உகந்த மண்ணாக இருப்பதும், அதற்கு தண்ணீர் தேவை குறைவு என்பதாலும் விவசாயிகள் அதிகமாக மிளகாய், பருத்தியை பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தில் பெண் ஒருவர் தன் வீட்டின் முன்பு கீரை விதைகளை தூவி உள்ளார். தற்போது அந்த கீரை விதைகள் நன்கு பச்சை பசேலென வளர்ந்து அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ந்து அழகாக காட்சியளித்து வருகின்றது.

விவசாயிகள் ஆர்வம்

இது குறித்து கருமல் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி சம்பூரணம் கூறியதாவது, இதுவரை வீட்டு பகுதியில் கீரை பயிரிட்டது கிடையாது. அரைக்கீரை விதைகளை வீட்டின் முன்பு தூவி தினமும் தண்ணீர் ஊற்றி வந்தேன். 2 மாதத்திற்கு மேலாக கீரை விதை தூவப்பட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வந்தேன். தற்போது கீரை செடிகளாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் கீரைகள் அனைத்தையும் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இதே போல் தேர்வேலி உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் தங்கள் வீட்டின் முன்பு கீரை விதைகளை தூவி கீரை விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story