வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை


வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை
x

விசேஷ நாட்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

கரூர்

வெற்றிலை சாகுபடி

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, முத்தனூர், சேமங்கி, நடையனூர், கோம்புப்பாளையம், நத்தமேடுபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.

வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பு

வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

விலை வீழ்ச்சி

இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர்) சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை (முதியம்பயிர்) சுமை ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை (முதியம் பயிர்) ரூ.3 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது.

தற்போது வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர்) சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம் பயிர்) சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை (முதியம் பயிர்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. தற்போது விசேஷ நாட்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.


Next Story