அரியலூரில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை


அரியலூரில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை
x

அரியலூரில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

அரியலூர்

மக்காச்சோளம் சாகுபடி

அரியலூர் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்து உள்ளனர். இதில் முன்பருவமாக 12 ஆயிரம் ஏக்கரும், பின் பருவமாக ஆயிரத்து 750 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மக்காசோளத்திற்கு யூரியா தேவை அதிகரித்துள்ளது. இதனால் உரக்கடைகளுக்கு விவசாயிகள் சென்று வருகின்றனர். இவ்வாறு வரும் விவசாயிகளுக்கு போதுமான உரங்கள் கிடைப்பதில்லை.

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு மட்டுமே உரங்கள் வழங்கப்படுவதாகவும், மற்றவர்களுக்கு உரங்கள் வழங்குவதில்லை எனவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

கள்ளச்சந்தையில் விற்பனை

உரக்கடைகளில் குறிப்பிட்ட அளவு டோக்கன் கொடுப்பதாகவும் அதுவும் யூரியா வாங்கும்போது கூடுதலாக நுண்ணுயிர் உரம் வாங்க வற்புறுத்துவதாகவும், அவ்வாறு வாங்கினால் மட்டுமே யூரியா வழங்குவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சில உரக்கடைகளில் வரும் உரங்களை கள்ளச்சந்தையில் விற்பதால் அருகே உள்ள மற்ற உரக்கடையில் கூட்டம் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் தட்டுப்பாடு இன்றி உரங்களை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story