மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரெயில் மறியல் முயற்சி


மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரெயில் மறியல் முயற்சி
x

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரெயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

ரெயில் மறியல் போராட்டம்

தமிழகத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு, கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்றுத்தராமல் மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது. மேலும் கர்நாடகா மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு பச்சை கொடி காட்டி வருவதாக கூறி, மத்திய அரசை கண்டித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பரமசிவம், ராமலிங்கம், சதாசிவம், செல்லப்பிள்ளை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து, பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

100 பேர் கைது

இதைத்தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்றபோது போராட்டக்காரர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ரெயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசை கண்டித்தும், சம்பா சாகுபடிக்கு தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story