கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:46 PM GMT)

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தினார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தினார்கள்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விக்கிரம பாண்டியபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் வைகை தண்ணீர் அனைத்து கண்மாய்களையும் நிரப்ப முடியாமல் கடலில் கலந்து வீணாகுகிறது. இதனை தடுக்க வரத்துக்கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும். விக்கிரம பாண்டியபுரம் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரும் வேணுநாத உடையார் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் விவசாயம் பொய்த்து போனது. பருவ மழையும் பெய்யவில்லை. இதனால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் நாசமாகி விட்டன. விவசாயத்திற்காக உரம், பூச்சி மருந்து வாங்க கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு வழங்க வேண்டும்.

தடுப்பணை திட்டம்

மேலும், விக்கிரம பாண்டியபுரம் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வராத நிலையில் ஆம்பல்கூட்டத்தில் இருந்து கால்வாய் வழியாக உபரி மழை நீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் பொதுமக்கள், கால் நடைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது அந்த கால்வாயில் பொதுப்பணித்துறையினர் 3 தடுப்பணைகள் கட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story